Skip to main content
மேலதிகாரிகளே ..............




மேலதிகாரிகளே ,
அணியில் நீங்கள் இல்லாவிடினும்
பிணி ஏதும் இன்றிப்
பணி நடந்துகொண்டுதானிருக்கும்
என்பதை எப்போது
புரிந்து கொள்ளப்போகிறீர்கள் ?





மேலதிகாரிகளே ,
அறிவுரைகளை நீங்கள்
அடுக்கிக்கொண்டே போனால்
மதிப்பிழந்து போகும் உங்கள்
" முகவுரை " என்பதை
மனதில் பதித்துக்கொள்ளுங்கள் !




மேலதிகாரிகளே ,
சுட்டுவதாலும்
குட்டுவதாலும்
உங்கள்மீது வராத மரியாதை ,
ஆறுதலாய்த் தோளைத்
தட்டுவதால் வருமென்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள் !




மேலதிகாரிகளே ,
உங்கள்
புத்தியில் அமிழ்ந்திருக்கும்
பள்ளமும் ,
கண்கள் உமிழ்ந்திருக்கும்
கள்ளமும் ,
ஆகிய இவையிரண்டும்
உங்கள்காலடியில் நீங்கள் பறிக்கும்
பள்ளமென்பதை
உள்ளத்தால் உணர்ந்திடுங்கள் !




மேலதிகாரிகளே ,
பொறுப்பாய் இருக்கிறேனென்று
எந்நாளும் ,
வெறுப்பாய் நீங்களிருந்தால் ,
நற்பெயரென்பது உங்களுக்கான
மறுப்பாகிவிடும் மறந்துவிடாதீர்கள் !




மேலதிகாரிகளே ,
உங்கள்
கர்வமுடிச்சு அவிழ்ந்தாலே
சர்வசிக்கல்களும்
சரியாகுமென்பதைப்
புரிந்து கொள்ளும்
பக்குவம் உங்களுக்கிருக்கிறதா ?




மேலதிகாரிகளே ,
அனுபவம் தரும்
" மன - பாடத்தை " விடவா
புத்தகத்தின் மனப்பாடம் - உங்கள்
வித்தகத்தை விஸ்தரிக்கப்போகிறது ?




மேலதிகாரிகளே ,
ஒரு குழந்தையின்
குசும்பையே ரசிக்க முடியாத நீங்கள் ,
விசும்பையே வெற்றிகொண்டேனென்று
வீண்பெருமை கொள்ளாதீர்கள் !




மேலதிகாரிகளே ,
பலசமயங்களில்
இரைந்து பேசுவதைவிடவும்
கரைந்து பேசுவதென்பது
காரியத்தைச் சாதிக்குமென்பதை
கவனத்தில் வையுங்கள் !




மேலதிகாரிகளே ,
உங்கள் மகளின்
பள்ளிவிபரம் தெரியாமல் , - உலகின்
புள்ளிவிபரம் அத்துபடி என்று நீங்கள்
பீற்றிக்கொள்வதில்
பெருமையொன்றுமில்லை !




மேலதிகாரிகளே ,
உடலுழைத்து
நீங்கள் சிந்திய
வியர்வைத்துளிகளை வைத்து
உங்களை மதிப்பிட்டால் ,
அந்த மதிப்பில்
ராஜ்ஜியம் செய்வது வெறும்
பூஜ்ஜியமாகத்தானிருக்கும் !




மேலதிகாரிகளே ,
இறுகியமுகம் உங்களுக்கென்று
இறுமாந்திருக்காதீர்கள் .
அப்படிப்பார்த்தால்
இறந்தவனிடமும் இருக்கிறது
அதே இறுகியமுகம் !




மேலதிகாரிகளே ,
உங்கள் ஊழியர்களின்
சாதனைகளுக்கு
நீங்கள் ஒரு பாட்டாளியாவதும் ,
அவர்களின் தவறுகளுக்குப்
பொறுப்பு ஏற்பதில்
நீங்கள் ஒரு கூட்டாளியாவதும் - என
தலைமையின்
தலையாய பண்பே
இந்த இரண்டும்தானென்பதை
இதயத்தில் இருத்திக்கொள்ளுங்கள் !!!






Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது