Skip to main content
நேற்றுப்பெய்த மழையில் .............




நேற்றுப்பெய்த மழையில் ,

பூமி புதிதாய்த் தெரிந்தது !




மேகங்களின் தன்மை ,

வெண்மையாய் இருக்க ,

வானத்தின் நிறம்

நீலமாய்த் தெரிந்தது !




பறவைகள் ,

சந்தோஷமாய் சிறகடித்தன !




அலாரம் வைக்காமலேயே

ஆறு மணிக்கு விழிப்பு வந்தது !




கதிரவனைக் கண்டதும்

ைகள் தானாய்க் கும்பிட்டன !




அம்மா தந்த தேநீர்

திகட்டாமல் தித்தித்தது !




குளிர்ந்த நீரும்

சுகமாய்ச் சுட்டது !




அதிசயமாய்

அப்பா கூட திட்டவில்லை !




தங்கை அன்போடு

" அண்ணா " என்றழைத்தாள்




தெருவில் நடந்தேன்

அன்றைக்கென்று

அனைவரின் வாசல்களிலும்

அழகான கோலங்கள் !

அழித்துவிடக்கூடாதென்ற

அச்சத்தோடு

அடி மேல் அடி வைத்தேன் !




தாயோடு வந்த சிறுமி ஒருத்தி ,

தொலைவில் இருந்தே புன்னகைத்தாள் !




எப்போதும் அழுகிற குழந்தை ,

இப்போது சிரித்தது !




மாமரம் ஒன்று

மழை நீரால் ஆசீர்வதித்தது !




குறுக்கே வந்த வாகனக்காரன்

சீறாமல் சிரித்துச்சென்றான் !




பெருமுயற்சிகள் ஏதுமின்றி

பேருந்தில் சன்னலோரம்

இடம் கிடைத்தது !




பக்கத்து இருக்கையில்

அமர்ந்த பாட்டி ,

பாசமாகப் பார்த்தாள் !



பயணச்சீட்டு வாங்க

பத்து ரூபாயை நீட்டினேன் .

நான்கு ரூபாய் மீதியை

நடத்துனர் " நாணயமாக "

கொடுத்துப் போனார் !



முகத்தில் அறைந்த காற்றில் ,

குளிருக்கு பதிலாக

குளுமை இருந்தது !



என்றைக்கும் போல

பள்ளி ,

பயங்கரமாகத் தெரியவில்லை !



பிடிக்காத வாத்தியாருக்கும்

பண்போடு வணக்கம் வைத்தேன் !



மூன்றாம் வகுப்பு மல்லிகா

மகிழ்ச்சியோடு

மிட்டாய் தந்தாள் !



புதிய பாடம் ஒன்று

படித்ததில் பதிந்தது !

கடினக் கணக்கு ஒன்று

கவனித்ததில் புரிந்தது !



அன்று ஏனோ

பக்கத்து வீட்டு

பள்ளித்தோழன்

பகல் உணவு கொண்டுவரவில்லை !


ஏன் என்றதற்கு ,


" நேற்றுப் பெய்த மழையில் நனைந்தது

கூரை மட்டுமல்ல

எங்கள் வீட்டின் தரையும் தான் !

இரவெல்லாம் ,

தண்ணீரை வாரிஇரைத்தே - அம்மா

தெம்பில்லாமல் படுத்து விட்டாள் ! " என்றான் .



அவனுக்கு என்

பகல் உணவைப்

பகிர்ந்தளித்தேன் !

பசியோடு புசித்தான் !



அதன் பிறகு ,

இன்றைக்கும் மழை

பெய்ய வேண்டும் என

இறைவனிடம் வைக்கவிருந்த

கோரிக்கையை

இறுதியாய் இரத்து செய்தேன் !!!









Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது