Skip to main content


ஈழம் உங்கள்
புத்தியில் இருந்தது !
ஈழம் எங்கள்
இதயத்தில் இருந்தது !

-------------------------------------------------

காத்திருந்தீர்கள்
நீங்கள் !
தவமிருந்தோம்
நாங்கள் !

-------------------------------------------------

நீங்கள்,
எங்கள் தூதுவர்களையும்
கொன்றீர்கள் !
நாங்கள்,
தொலைகிறது என்று
உங்கள் ஒற்றர்களையும்
மன்னித்தோம் !

-------------------------------------------------

உங்கள்
கண்ணீர்ச்சுரப்பியும்
வியர்வையைச்
சுரந்தது !
எங்கள்
வியர்வைச்சுரப்பியும்
கண்ணீரைச்
சுரந்தது !

-------------------------------------------------

உங்களுடையவர்கள்
படைவீரர்கள் !
எங்களுடையவர்கள்
உடன்பிறப்புக்கள் !

-------------------------------------------------

உங்கள் தலைவன்
இருக்கிறான் !
எங்கள் தலைவன்
வாழ்கிறான் !

-------------------------------------------------

ஓலமிட்டீர்கள்
நீங்கள் !
முழக்கமிட்டோம்
நாங்கள் !

-------------------------------------------------

தந்திரநரிகள்
நீங்கள் !
விடுதலைப்புலிகள்
நாங்கள் !

-------------------------------------------------

போர்க்குற்றவாளிகள்
நீங்கள் !
புரட்சியாளர்கள்
நாங்கள் !

-------------------------------------------------

உங்களுக்கது
களம் !
எங்களுக்கது
வாழிடம் !

-------------------------------------------------

உங்களுடையது
வெறி !
எங்களுடையது
தாகம் !

-------------------------------------------------

உங்களுடையது
சண்டை !
எங்களுடையது
போர் !

-------------------------------------------------

உங்கள்
துப்பாக்கியில்
குண்டுகள் !
எங்கள்
துப்பாக்கியில்
கொள்கைகள் !

-------------------------------------------------

சரித்திரத்தின்
கருப்புப்பக்கத்தில்
நீங்கள் !
சரித்திரத்தின்
சிவப்புப்பக்கத்தில்
நாங்கள் !

-------------------------------------------------

எங்கள்
உடல்கள் மட்டும்
இறந்துவிட்டன !
உங்கள்
உடல்கள் மட்டும்
நடமாடுகின்றன !

-------------------------------------------------

வெற்றியின்
மிதப்பில்
நீங்கள் !
தோல்வி என்ற
படிக்கட்டில்
நாங்கள் !

-------------------------------------------------

உங்களைப்
பொறுத்தவரை
நாங்கள்
புதைக்கப்பட்டோம் !
எங்களைப்
பொறுத்தவரை
நாங்கள்
விதைக்கப்பட்டோம் !
 

Comments

  1. உணர்வுக் குவியலாய் குமுறிடும் வரிகள்!

    இதய வலியை எழுதிச் சென்றீர்கள்... அருமை!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி தோழி

      Delete
  2. //உங்களைப் பொறுத்தவரை நாங்கள் புதைக்கப்பட்டோம் !
    எங்களைப் பொறுத்தவரை நாங்கள் விதைக்கப்பட்டோம் !//

    மிகவும் உணர்வுபூர்வமான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. உணர்வுப்பூர்வமான வரிகளை உணர்ந்ததற்கு நன்றி ஐயா

      Delete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது