Skip to main content
உத்தமக் காதலியே ...........




நான் நானாகவும் ,


நீ நீயாகவும் இருந்து - பிறகு


நான் நீயாகவும்


நீ நானாகவும் மாறிப்போனதன்


மர்மம் உணர்கிறாயா


என் மனங்கவர்ந்தவளே !




மௌனத்தின் மொழிகற்றதும்


விழிகளால் பேசும் கலை அறிந்ததும்


காத்திருப்பின் சுகம் புரிந்ததும்


நம் காதலால் தானென்று


என்னைபோலவே நீயும் உணர்கிறாயா


என் இதயத்திருடியே !




பேசிகொண்டிருந்த


எத்தனையோ இரவுகளில்


யார் முதலில் தூங்கிப்போனாலும்


மறுநாளே மனமார


மன்னிப்புக் கேட்பதும் ,


மன்னிப்புக் கேட்டதற்க்குத்தான்


மன்னிப்பில்லை என்று


பொய்யாகக் கோபிப்பதும் என


விட்டுக் கொடுத்தலின் உச்சத்தில்


வாழ்ந்திருக்கும் நாட்கள் இவை என்று


விளங்குகிறதா வசந்தம்தந்தவளே !




அலுவலுக்கு நடுவே ,


அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பதும்


பிறகு ,


பேச்சிற்கு நடுவே


அவ்வப்போது அலுவல் பார்ப்பதும் ,


அதன் பின்


பேசிக்கொண்டிருப்பதே


அலுவல் ஆனதும் என


அன்றாட வழக்கங்கள் அனைத்தும்


அப்படியே தலைகீழானதன்


சூட்சமம் தெரிகிறதா


என் இனிய சூனியக்காரியே !




கல்லூரி செல்வதாய் நீயும்


அலுவலகம் செல்வதாய் நானும்


அவரவர் வீட்டில் அழகாகப் பொய்சொல்லி ,


பொதுவானதொரு பேருந்து நிலையத்தில்


பதைபதைத்து சந்தித்து


கோவிலுக்குப் போவதாய்த்


தீட்டியிருந்த திட்டத்தைக் கைவிட்டு


திரைப்படம் போகலாமென


திடீரெனத் தீர்மானித்து


கூட்டமில்லாதொரு திரையரங்கில்


தனியிடம் தேடியமர்ந்து ,


தவறு செய்கிறோமோ என்ற


தடுமாற்றத்தில் ,


பாதிப் படத்திலேயே எழுந்து வந்து


மீதிப் பொழுது கழிக்க


பூங்காவிற்குச் சென்று


பூக்களைப் பார்த்துக் கொண்டே


பேசிக்கொண்டிருந்து விட்டு


பிறகு பசியெடுத்தது என


கொண்டுவந்த மதியஉணவை


மாறி மாறிப் பகிர்ந்துண்டு


மகிழ்ந்திருக்கும் நாட்களை


மறக்க முடியுமா


என் மனதின்நாயகியே !




நான் வாழ்த்துக்கூறிய தேர்வில்


முதல் மதிப்பெண் பெற்றதை


மகிழ்ச்சியோடு நீ சொன்னபோது ,


கைம்மாறாய் கையிலாவது முத்தம் கொடு என


நான் சண்டித்தனம் செய்ததும்


முடியவே முடியாதென


மருகி நீ மறுத்ததும் பிறகு


வாடிய என் முகம் கண்டு


என் கன்னத்திலே நீ


கனியிதழ் பதித்ததும் ,


வண்ண வண்ண விண்மீன்கள் என்


விழிகளில் வட்டமிட்டதும் என


காதலில் வாழ்கிற கவிதை நாட்களை


கவனிக்கிறாயா


என் கனவுதேவதையே !




நானும் நீயும்


நடந்து போகும்போது ,


எதிரில் வரும்


'எக்குத்தப்பான ' பெண்களை


ஏக்கமாய் நான் பார்த்தால்


தலையில் குட்டியிருக்கிறாய்


கன்னத்தைக் கிள்ளியிருக்கிறாய்


" அவள் பின்னாலேயே போ ! " என


செல்லமாய்க் கடிந்திருக்கிறாய் !


ஆனால் ஒருநாள் கூட


" பதிலுக்கு நானும் பிறஆண்களைப்


பார்த்தால் என்ன ஆகும் ? " என்று


நீ கேட்டதேயில்லை !


ஒருநாள் இதை


உன்னிடமே கேட்டுவிட்டேன் .


அப்போது நீ சொன்னாய் ,


" உன்னோடு இருக்கும்போது


என் உலகமே நீயாக இருப்பதால்


புறவுலகம் மறந்துவிடுகிறதடா


பைத்தியகாரா ! " என்று


என் தலைமுடி கலைத்தபடி !


உணர்ச்சிவசத்தில் என் கண்கள்


தானாய்க் கலங்க


அது கண்டு நீயும் கலங்கி


ஆறுதலாய் என்னை நீ


அணைத்துக் கொள்ளுப்போது


நம் உயிர்கள் ஒன்றுகலப்பதை


உணர்கிறாயா என் உத்தமக்காதலியே !!!






Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது